பாபநாசம் (Papanasam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் மற்றும் பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், தேர்வுநிலை பேரூராட்சியும் ஆகும். பாபநாசம் என்னும் சொல்லின் பொருள் பாவங்களை ஒழிக்குமிடம் என்பதாகும்.
பெயர்க் காரணம்
இராவணனை அழித்த இராமர், இலட்சுமணன், அனுமன், சீதை ஆகியோருடன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தங்களை ஏதோ தோசம் பின்தொடர்வது போல் உணர்ந்தார். கரன், தூசன் ஆகியோரை கொன்ற பிரம்மகத்தி தோஷமே என்றறிந்தார். அப்போது ஒரு வில்வ மரத்தடியைக் கண்டார். அங்கே குடமுருட்டி ஆறு ஓடிக்கொண்டிருந்தது. தோஷம் விலக சிவபூசை செய்வதே உத்தமம் என்று எண்ணினார். அனுமன் உடனே காசியில் இருந்து லிங்கம் கொண்டுவர பறந்து சென்றார். அதற்குள் சீதாபிராட்டி தன் கரங்களினாலேயே மணலில் அநேக லிங்கங்களைபிடித்து வைத்தார்.
அனுமன் காசியிலிருந்து கொண்டு வந்த லிங்கத்தை வெளிப்பிரகாரத்தில் வைத்துவிட்டு உள்ளே வந்ததும் லவரைக்கண்டு தான் கொண்டுவந்த லிங்கத்தை தான் மூலவராக நிறுவ வேண்டும் என்ற ஆணவத்துடன் லவரை தன் வாலினால் கட்டி இழுக்க, வால் அறுந்து வடக்கே சென்று விழுந்தார். (இவ்விடம் வாலறுந்த நல்லூர் அல்லது அனுமான் நல்லூர் என்று அழைக்கப்படுகிறது). அனுமான் மீது பரிவு கொண்ட இராமர், இந்த 107 சிவலிங்கங்களை வழிபட்டாலும், 108வது லிங்கமான அனுமத்லிங்கத்தையும் வழிபட்டு, அம்பாளையும் வழிபட்டாலே முழு பலனும் பெற்று தோஷம் நீங்கும் என்று கூறுகிறார்.
அந்நாள் முதல் “மனிதப் பிறவியில் இராமபிரானின் பாவம் அகல காரணமான இத்தலம் பாபவிநாசம் என்று அழைக்கப்படும்” என்று அருள்வாக்கு அருளினார். பாபவிநாசம் என்ற பெயர் நாளடைவில் பாபநாசம் என்று மருவி விட்டது.
அமைவிடம்
தஞ்சாவூர் நகரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் கும்பகோணம் நகரிலிருந்து 15 கி.மீ.; தஞ்சாவூர் 25 கிலோமீட்டர் தொலைவிலும் பாபநாசம் உள்ளது. கும்பகோணம் நகரத்தின் வியாபாரத் துணை நகரமாகவும் பாபநாசம் கருதப்படுகிறது.
பேரூராட்சியின் அமைப்பு
11.51 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட பாபநாசம் 15 வார்டுகளும் 108 தெருக்களும் கொண்ட ஒரு பேரூராட்சியாக வகைப்படுத்தப்படுகிறது. மேலும் இப்பேரூராட்சி பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்படுகிறது.
புவியியல்
10.9333°வடக்கு 79.2833°கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் பாபநாசம் புவியியல் முறையில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 22 மீட்டர் (72 அடி) உயரத்தில் இவ்வூர் உள்ளது. மேலும் கோப்பென் காலநிலை வகைப்பாடு கொண்டதாகவும் பாபநாசத்தின் காலநிலை வகைப்படுத்தப்படுகிறது. இதன்படி இங்கு வெப்பமண்டல வறட்சியும் குளிரும் நிலவுகின்றன
| [மறை]தட்பவெப்ப நிலைத் தகவல், Papanasam (altitude: 37m) | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
| உயர் சராசரி °C (°F) | 29.3 (84.7) | 31.1 (88) | 33.6 (92.5) | 35.3 (95.5) | 36.7 (98.1) | 36.7 (98.1) | 35.4 (95.7) | 34.8 (94.6) | 34.2 (93.6) | 32.1 (89.8) | 29.7 (85.5) | 28.5 (83.3) | 33.12 (91.61) |
| தினசரி சராசரி °C (°F) | 25.3 (77.5) | 26.5 (79.7) | 28.5 (83.3) | 30.6 (87.1) | 31.7 (89.1) | 31.6 (88.9) | 30.7 (87.3) | 30 (86) | 29.6 (85.3) | 28.2 (82.8) | 26.4 (79.5) | 25.1 (77.2) | 28.68 (83.63) |
| தாழ் சராசரி °C (°F) | 21.3 (70.3) | 21.9 (71.4) | 23.5 (74.3) | 26 (79) | 26.8 (80.2) | 26.6 (79.9) | 26.1 (79) | 25.3 (77.5) | 25.1 (77.2) | 24.3 (75.7) | 23.1 (73.6) | 21.8 (71.2) | 24.32 (75.77) |
| பொழிவு mm (inches) | 35 (1.38) | 12 (0.47) | 13 (0.51) | 36 (1.42) | 55 (2.17) | 39 (1.54) | 60 (2.36) | 134 (5.28) | 99 (3.9) | 198 (7.8) | 208 (8.19) | 137 (5.39) | 1,026 (40.39) |
| ஆதாரம்: Climate-Data.org (altitude: 37m) | |||||||||||||
காவிரி, திருமலைராஜன், அரசலாறு மற்றும் குடமுருட்டி ஆகிய நான்கு ஆறுகளும் இவ்வூரின் வழியே பாய்கின்றன.
மக்கள் தொகை
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சியில் 4,360 வீடுகளும், 17,548 பேர்கள் என்ற மக்கள்தொகையும் கொண்டிருந்தது. இவர்களில் 8628 பேர் ஆண்கள் மற்றும் 8920 பேர் பெண்களாவர். இம்மக்கள் தொகையில் 1782 பேர் ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆவர். 1034 ஆண்களுக்கு 996 பெண்கள் என்ற பாலின விகிதம் இங்கு உள்ளது. இந்நகரத்தின் எழுத்தறிவு சதவீதம் 89.19% ஆகும். 80.09 என்ற நாட்டின் எழுத்தறிவு சதவீதத்தைக் காட்டிலும் இது அதிகமாகும்.
முக்கிய இடங்கள்
- பாபநாசம் திருப்பாலத்துறையில் சோழர்களால் கட்டப்பட்ட பாலைவனநாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. தேவாரப் பாடல் பெற்றத்தலமான இங்கு திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடத்த இப்பொழுது பயன்பட்டு வருகிறது. இத்தலத்தில் அன்னை தவளவெண்ணகையாள் அருள்பாலிக்கிறார்..
- பாபநாசத்தில் வைணவ திவ்விய தேசத்தலங்களுள் ஒன்றான சீனிவாசப் பெருமாள் கோவிலும் 108 சிவாலயம் கோவிலும் இங்கு உள்ளன.
- 86 அடி அகலமும் 36 அடி உயரமும் கொண்ட நெற்களஞ்சியம் ஒன்று இங்குள்ளது. 1600-1634 காலத்தைச் சேர்ந்த நாயக்கர்கள் இதைக் கட்டியதாக அறியப்படுகிறது. மாநில தொல்பொருள் துறை இதனை ஒரு நினைவுச்சின்னமாக அறிவித்துள்ளனர்.
- திருநல்லூர், கோவிந்தக்குடி, ஆவூர், மாளிகைத் திடல், மட்டியான் திடல், பாபநாசம், திருப்பாலைத்துறை முதலியன ஏழூர் தலங்களாகக் கருதப்படுகின்றன.
- புனித செபசுத்தியார் திருத்தலம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. நூற்றாண்டு விழா கொண்டாடிய இத்தேவாலயம் பல சிறப்புகளை கொண்டதாகும். ஓவ்வொரு ஆண்டும் புனித செபசுத்தியார் ஆண்டு பெருவிழாவானது உயிர்ப்பு ஞாயிறு பண்டிகைக்கு அடுத்து வரும் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இவற்றைத் தவிர புனித அந்தோனியார் ஆலயம் ஒன்றும் சின்னக்கடைத் தெருவில் பெரிய பள்ளிவாசல் ஒன்றும் அமைந்துள்ளன.
போக்குவரத்து
கும்பகோணம் – தஞ்சாவூர் சாலையில் பாபநாசம் அமைந்து இருப்பதால் பயணத்திற்கான பேருந்து வசதிகள் எந்நேரமும் இருக்கும். மேலும் பாபநாசத்திற்கு திருவையாறில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.
தொடர்வண்டி நிலையம்
பாபநாசம் தொடர்வண்டி நிலையம் கும்பகோணத்திற்கும் தஞ்சாவூருக்கும் இடையில் உள்ளது. பாபநாசம் நகரின் எல்லைக்குள் மூன்று அடுத்தடுத்த ரயில் நிலையங்கள் உள்ளன. அவை பண்டாரவாடை, அய்யம்பேட்டை மற்றும் பசுபதிகோயில். முன்பதிவு நேரம்வாரநாட்களில்
| காலை | 08:00 முதல் 12:45 |
| மாலை | 13:45 முதல் 20:00 |
ஞாயிற்றுக் கிழமைகளில்
| காலை | 08:00 முதல் 12:45 |
| ரயில் எண் | பெயர் | வகை | வ.நேரம் | பு.நேரம் | சேருமிடம் |
|---|---|---|---|---|---|
| 16106 | செந்தூர் விரைவுவண்டி | விரைவு | 04:30 | 04:31 | சென்னை |
| 16232 | மைசூர்-மயிலாடுதுறை விரைவுவண்டி | விரைவு | 05:10 | 05:11 | மயிலாடுதுறை |
| 16183 | உழவன் விரைவுவண்டி | விரைவு | 05:59 | 06:00 | தஞ்சாவூர் |
| 56811 | மயிலாடுதுறை – திருச்சிராப்பள்ளி பயணிகள் | பயணிகள் | 07:14 | 07:15 | திருச்சி |
| 56039 | கும்பகோணம் – தஞ்சாவூர் பயணிகள் | பயணிகள் | 08:22 | 08:23 | தஞ்சாவூர் |
| 56824 | திருச்சிராப்பள்ளி – மயிலாடுதுறை பயணிகள் | பயணிகள் | 08:48 | 08:49 | மயிலாடுதுறை |
| 16233 | மயிலாடுதுறை-திருச்சிராப்பள்ளி விரைவுவண்டி | விரைவு | 08:54 | 08:55 | திருச்சி |
| 16854 | சோழன் விரைவுவண்டி | விரைவு | 10:43 | 10:44 | சென்னை |
| 76826 | தஞ்சாவூர் – மயிலாடுதுறை பயணிகள் (DEMU) | பயணிகள் | 11:42 | 11:43 | மயிலாடுதுறை |
| 12084 | கோயம்புத்தூர் – மயிலாடுதுறை ஜன் சதாப்தி | ஜன் சதாப்தி | 12:05 | 12:06 | மயிலாடுதுறை |
| 56821 | மயிலாடுதுறை – திண்டுக்கல் பயணிகள் | பயணிகள் | 12:09 | 12:10 | திண்டுக்கல் |
| 16234 | திருச்சிராப்பள்ளி – மயிலாடுதுறை விரைவுவண்டி | விரைவு | 13:53 | 13:54 | மயிலாடுதுறை |
| 16853 | சோழன் விரைவுவண்டி | விரைவு | 14:04 | 14:05 | திருச்சி |
| 12083 | மயிலாடுதுறை – கோயம்புத்தூர் ஜன் சதாப்தி | ஜன் சதாப்தி | 15:28 | 15:29 | கோயம்புத்தூர் |
| 56822 | திண்டுக்கல் – மயிலாடுதுறை பயணிகள் | பயணிகள் | 15:35 | 15:36 | மயிலாடுதுறை |
| 16231 | மயிலாடுதுறை-மைசூர் விரைவு | விரைவு | 18:32 | 18:33 | மைசூர் |
| 56820 | தஞ்சாவூர் – கும்பகோணம் பயணிகள் | பயணிகள் | 18:42 | 18:43 | கும்பகோணம் |
| 76825 | மயிலாடுதுறை – தஞ்சாவூர் பயணிகள்(DEMU) | பயணிகள் | 19:04 | 19:05 | தஞ்சாவூர் |
| 56812 | திருச்சிராப்பள்ளி – மயிலாடுதுறை பயணிகள் | பயணிகள் | 19:38 | 19:39 | மயிலாடுதுறை |
| 56823 | மயிலாடுதுறை – திருச்சிராப்பள்ளி பயணிகள் | பயணிகள் | 20:48 | 20:49 | திருச்சி |
| 16105 | செந்தூர் விரைவுவண்டி | விரைவு | 21:24 | 21:25 | திருச்செந்தூர் |
| 16184 | உழவன் விரைவுவண்டி | விரைவு | 21:34 | 21:35 | சென்னை |
| 16779 | திருப்பதி – இராமேசுவரம் (மீனாட்சி) விரைவுவண்டி (ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் மட்டும் ) | விரைவு | 23:04 | 23:05 | இராமேசுவரம் |
| 16780 | இராமேசுவரம் – திருப்பதி (மீனாட்சி) விரைவு வண்டி (திங்கள், வியாழன் மற்றும் சனி கிழமைகளில் மட்டும்) | விரைவு | 23:09 | 23:10 | இராமேசுவரம் |
இங்குள்ள தொடருந்து நிலையத்தில் சில தொடருந்துகள் தவிர அனைத்து தொடருந்துகளும் நின்று செல்லும்.
பாபநாசம் அருகில் உள்ள வானூர்தி நிலையம் திருச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்
அருகில் உள்ள கோவில்கள்
- கபிசுதலம் – கசேந்திர வரதன் ஆலயம் – பாபநாசத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.
- நல்லூர் – கல்யாண சுந்தரேசுவரர் ஆலயம் – பாபநாசத்தில் இருந்து வாழைப்பழக்கடை வழியாக வலங்கைமான் செல்லும் வழியில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.
- திருவலஞ்சுழி – கற்பக நாதேசுவரர் ஆலயம் – பாபநாசத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 7 கி.மீ. தொலைவில் உள்ளது.
- திருக்கருகாவூர் – கர்ப்பரட்சாம்பிகை ஆலயம்[9] – பாபநாசத்தில் இருந்து சாலியமங்கலம் செல்லும் வழியில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.
- சுவாமிமலை – சுவாமிநாத சுவாமி (ஆறுபடை வீடுகளில் ஒன்று) ஆலயம் – பாபநாசத்தில் இருந்து கபிசுதலம் வழியாக கும்பகோணம் செல்லும் வழியில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.
- ஆவூர் – பசுபதீசுவரர் ஆலயம் – பாபநாசத்தில் இருந்து பட்டீசுவரம் வழியாக கும்பகோணம் செல்லும் வழியில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.
- திருவைகாவூர் – வில்வனேசுவரர் ஆலயம் – பாபநாசத்தில் இருந்து கபிஸ்தலம் வழியாக 8 கி.மீ. தொலைவில் உள்ளது. அரை மணி நேரத்திற்கு ஒரு முறை பாபநாசத்தில் இருந்து சீருந்து வசதி உண்டு.
- பட்டீசுவரம் – தேனுபுரீசுவரர் ஆலயம் – பாபநாசத்தில் இருந்து ஆவூர் வழியாக கும்பகோணம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
- சௌந்தர ராச பெருமாள் கோவில் – சுந்தரபெருமாள் கோவில் – பாபநாசத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.
- வலங்கைமான் – மாரியம்மன் கோவில் பாபநாசத்தில் இருந்து நல்லூர் வழியாக வலங்கைமான் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
- தாராசுரம் – சராவதேசுவரர் ஆலயம் – பாபநாசத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது.
- கருப்பூர் – அகிலாண்டேசுவரி ஆலயம் – பாபநாசத்தில் இருந்து கபிஸ்தலம் வழியாக திருவையாறு செல்லும் வழியில் 2 கி.மீ. தொலைவில் சருக்கை கிராமம் அருகில் உள்ளது.
- தஞ்சாவூர் – பெருவுடையார் – பெரிய கோவில் – 25 கி.மீ. தொலைவில் உள்ளது.